தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வித் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

kaleelrahman

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த வாரம் முதல்வர் தொடங்கி வைப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பராமரிப்பு நிலை குறித்து மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறோம். நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மாலை 5 முதல் 7 மணி வரை கற்றல் இடைவெளியை போக்க மாணவர்களை பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த வாரம் முதல்வர் தொடங்கி வைப்பார். 2.5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பெற்றோர்களின் பொருளாதார சூழலாலும், இடமாற்றம், புதிய ஆட்சி மாற்றம் வந்ததால் சேர்ந்திருக்கலாம்" எனவும் தெரிவித்தார்.

அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் போது, சுழற்சி முறையில் வகுப்புகள் எடுத்தாக வேண்டும். வகுப்பறைகளில் மட்டுமின்றி பேருந்துகளில் வரும் போதும் மாணவர்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.