|
வாவ்!
வெளிநாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், அந்நாட்டு மாணவர்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்களைப் போல சகஜமாகப் பேசினால் கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?
கடந்த வாரம் நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக உஸ்பெக்கிஸ்தான் சென்றார் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி. உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இந்தியத் தூதர் கீதேஷ் சர்மா, ஹமித் அன்சாரிக்கு கொடுத்த வரவேற்பில் தமிழ் பேசும் உஸ்பெக் மாணவர்கள் இருவர் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் இருவர் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கணத்தில் ஆராய்ச்சி செய்யும் உஸ்பெக் மாணவி கமோலா எர்காஷிவா, அழகான தமிழில் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார்.
முதுகலை பட்டப் படிப்பில் தமிழ் இலக்கணத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற கமோலா, கடந்த 3 ஆண்டுகளாக தாஷ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடீஸ் என்ற மையத்தில் தமிழ் மொழியைக் கற்றுள்ளார். கமோலா மட்டுமல்ல, இன்னொரு மாணவி லோலா மாக்டியுபா, சின்னப்ப பாரதியின் கதைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரின் ஓர் புத்தகத்தை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
உஸ்பெக் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மேல் இவ்வளவு ஆர்வம் எப்படி வந்தது?
கமோலா, எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் 500-க்கும் அதிகமான தமிழ்ப் புத்தகங்களும் அகராதிகளும் இருந்தன. அவ்வளவு புத்தகங்களையும் பார்த்தபோது, தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது" என்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் இலக்கணத்தில் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க இருக்கும் லோலாவும் கமோலாவும் மற்ற உஸ்பெக் மாணவர்களுக்கும் தமிழைக் கற்றுத் தருகிறார்கள். பல மொழி பேசும் ஆசாத் என்.ஷமடோவ், தற்போது இந்த மையத்தில் உஸ்பெக் மாணவர்கள் 80 பேர், இந்தி, பஞ்சாபி, தமிழ், பெங்காலி, உருது போன்ற இந்திய மொழிகளைக் கற்று வருகிறார்கள்" என்கிறார். இந்த மையத்தின் தெற்காசிய மொழித்துறை தலைவர் சிராஜுதீன் நிர்மேடவ், இந்தி, தமிழ் இரண்டு மொழிகளையும் கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள் என்று உஸ்பெக் மாணவர்களை எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்" என்கிறார்.
-கீதா
|