|
இன்றையத் தேவை : இரும்புக்கரம்
இளைஞர்களிடையே வன்மத்தை விதைத்து, ஜாதிகளிடையே விரோதத்தை வளர்த்து, சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன என்று கடந்த இதழில் கேள்வி எழுப்பியிருந்தது, ‘புதிய தலைமுறை’.
அதற்கு இத்தனை விரைவில் விடை கிடைக்கும் என நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த திங்களன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசும் போது, ‘ஜாதி அமைப்புகள் என்பதையும் தாண்டி, வன்முறையைத் தூண்டும் அரசியல் கட்சி எதுவாயினும் அது தடை செயப்படும்’ எனத் தமிழக முதல்வர் எச்சரித்திருக்கிறார்.
‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனதை ஒலிப்பது போல் முதல்வரின் குரல் ஒலிக்கிறது. இதற்கு முன், இட ஒதுக்கீடு, காவிரி, பொது நுழைவுத் தேர்வு போன்ற வேறு பல விஷயங்களில் துணிந்து நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கும் முதல்வர், இந்த விஷயத்திலும் அவசியம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார் என்றே நம்பிக்கை கொள்கிறோம். ‘எந்தக் கட்சி ஈடுபட்டாலும்’ என்று அவரது அறிக்கையில் உள்ள வாசகம், முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அரசு பாரபட்சம் பாராமல், அரசியல் லாப நஷ்டங்களைக் கணக்கிடாமல் உறுதியாகச் செயல்பட வேண்டும்.
இது போன்ற எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் போராட்டம் நடத்த முற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கைது செயப்பட்டதையடுத்து வட மாவட்டங்களில் நடந்த வன்முறையில்
-
அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்பட மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
-
இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை ஆகியுள்ளன.
-
ஓர் அப்பாவி ஓட்டுநர் தீக்காயம் அடைந்து இறந்துள்ளார்.
-
வாகனங்கள் மீது கல் வீசித் தாக்கிய சம்பவங்களில் ஓர் அப்பாவி லாரி ஓட்டுநர் மற்றும் அப்பாவிப் பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள் எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
-
இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவன்றி கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் வன்முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க, அரசு, வன்முறை சக்திகளைக் கட்டுக்குள் வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அது அரசின் கடமையும் கூட.
எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனையும் விட பொதுமக்களின் நலம் முக்கியமானது. முதன்மையானது.
|