|
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
என். ஹரிபிரசாத்
எயின்டோவென் டிசைன் அகாதெமியில் தனது பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பு செய்யும்போது, ஜானுக்கு இந்தப் புதிய கருவி பற்றிய சிந்தனை தோன்றியுள்ளது. அதாவது ஒரு மனிதன் இசையை மீட்ட வேண்டுமெனில், ஏதேனும் ஓர் இசைக்கருவியின் தன்மைக்கேற்ப உடலினை அசைத்துப் பழக்கம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல திருத்தமான இசையை வெளிப்படுத்த முடியும். இந்த முறைக்கு மாற்று வழிமுறையைக் கண்டுபிடிக்க எண்ணிய ஜான், இந்தச் சிறிய மின்னணுக் கருவியை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இசைக்கு ஏற்ப உடலினை பழக்கப்படுத்த வேண்டியது இல்லை. புல்லாங்குழல் வாசிப்பவர், தனது விரல்களை பழக்கப்படுத்த வேண்டும். டிரம் செட் வாசிப்பவர், கைகளுக்கு முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், இந்த மின்னணு இசைக்கருவியை உடலில் அணிந்து இசைப்பதற்கு கலையுணர்வுடன் இயற்கையான உடல் அசைகளை மேற்கொண்டாலே போதும். வெவ்வேறு விதமான இசைப் பரிமாணங்களை இந்தக் கருவி மூலம் உருவாக்க முடியும். இதற்கென தனியாகப் பயிற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை.
இந்தச் சிறிய மின்னணுக் கருவியை அணிந்து கொள்பவர்கள், தமது விரலை சிறிது லேசாக அசைப்பது அல்லது பாதங்களை தரையில் தட்டுவதன் மூலம் இசைக்கருவிகளின் சப்தங்களை அழகாக வெளிக்கொண்டுவர முடியும். மனித உடலின் அசைவுகளைக் கொண்டு இயற்கையாக உருவாகும் இந்த இசையை சப்த உள்ளுணர்வு (Sound on Intuition) என்று அழைக்கின்றனர்.
விரல்களின் அசைவினை சென்சார் மூலம் உணர்ந்து, அதற்கேற்ப இந்தக் கருவி இசையை வெளிப்படுத்தும். இதே போல் கை விரல்களில் அணியும்போது, விரல்களை மடிக்கின்றபோது வெவ்வெறு வகையான சப்தங்களை வெளிப்படுத்தும். இதே போன்று கால்விரல்களில் இந்தக் கருவி மாட்டப்படும்போதும் இயங்கும்.
மேலும் நெஞ்சினில் அணிந்து கொள்ளக்கூடிய சென்சார் ஒன்று இதயத்துடிப்பை உணர்ந்து, டிரம்மின் ஓசையை இந்தக் கருவி வெளிப்படுத்தும். இந்த மின்னணு இசைக் கருவிகள் அனைத்தும் MIDI (Musical Interface Digital Interface) தொழில்நுட்ப தரநிலை கொண்டு இயக்கப்படுகின்றன.
மேலும் பதியப்பட்ட அசைவுகளை லேப்டாப் அல்லது கணினியுடன் இணைத்தால், வெவ்வேறு புதிய இசை வடிவங்களைப் பெறமுடியும். புதிய பரிணாமமாக வளர்ந்துவரும் இந்த மின்னணுக் கருவி, மிக விரைவில் அனைத்து உடலிலும் இசையை உருவாக்கும் .
|