|
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
எம். செந்தில்குமார்
தமிழகத்திலுள்ள பல ஏரிகள், ஆறுகள், குளங்கள் கோடையின் தாக்கத்தால் நீர் வற்றி காணப்பட்டாலும் ஆகாயத்தாமரையின் புண்ணியத்தில் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன.அழகுதான் ஆபத்து என்பதுபோல கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் ஆகாயத்தாமரைகள் தங்களின் வளர்ச்சிக்காக அதிக அளவு நீரை உறிஞ்சக்கூடியது என்பதை நாம் அறிவதில்லை.
வாட்டர் ஹயான்சித் (WATER HYANCITH) என அழைக்கப்படும் இந்த ஆகாயத்தாமரை நீர்வாழ் களைச்செடி. அசுத்தமான நீர்நிலைகளில் மட்டும் இது அதிரடி வளர்ச்சி காட்டும்.
இன்றுவரை ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பது என்பது சிரமமான காரியமாகவே இருந்துவருகிறது.அவ்வப்போது கண்துடைப்பிற்காக உள்ளூர் நிர்வாகங்கள் புல்டோசர் போன்றவற்றால் ஆகாயத் தாமரைகளை அகற்றி வருகின்றன. ஆனால், முற்றிலும் அழிப்பதற்கு எந்த நடவடிக்கையும், மாற்று மருந்துகளும் இதுவரை இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் ஆகாயத் தாமரைகளை அழிப்பதற்கு இயற்கைப் பொருள்களினால் உருவாக்கப்பட்ட பயோ ஃபைன் (BIO FINE) என்ற இயற்கை களைக்கொள்ளியைக் கண்டறிந்துள்ளார், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியைச் சேர்ந்த உயிர் தொழில்நுட்பப் பிரிவு தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன்.
முற்றிலும் இயற்கை மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஃபயோ பைன் மருந்தை குறிப்பிட்ட விகிதத்தில் ஆகாயத்தாமரைகளின் மேல் தெளித்தால், இரண்டே நாள்களில் அவைகள் பட்டுப்போய்விடுகின்றன. பயோ ஃபைன், இயற்கை களைக் கொல்லி என்பதால், நீர்நிலைகளும் பாதிப்படைவதில்லை. இந்த இயற்கை களைக்கொல்லிக்கான காப்புரிமை வாங்குவதற்கான முயற்சியில் உள்ளார் பேராசிரியர் ராஜேந்திரன்.
வருடம் முழுவதும் ஆகாயத் தாமரைகளை மேலோட்டமாக அகற்றுவதால், பணம் மற்றும் மனித உழைப்புதான் வீணாகிறது. மேலும் நீரில் கரையக்கூடிய ஆக்சிஜனின் அளவை இவை குறைப்பதால், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் பிரச்சினையும் உள்ளது. ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நமக்கு, ஆகாயத்தாமரை தேவையில்லாத செடிதான். நன்னீர் ஆதாரங்களில் ஆகாயத்தாமரைகள் ஓரளவே வளர்வதால், அவற்றை பயோ ஃபைன் கொண்டு அழிப்பதைவிட நாமாகவே எளிதில் அகற்றிவிடலாம். ஆனால், அசுத்த நீரில் ஆகாயத்தாமரைகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த பயோ ஃபைன் தான் ஒரே வழி" என்கிறார் இவர்.
பயோ ஃபைன் ஆகாயத் தாமரைகளை அழிப்பது மட்டுமல்லாமல், நீரில் உள்ள பாக்டீரியாக்களை முழுவதுமாகவும் கொசுக்களின் லார்வாக்களை ஓரளவிற்கு அழிக்கின்றன என்பது எங்கள் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், கொசுக்களைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் மருந்துகளில் பயோ ஃபைன் கலந்து தெளித்தால் கொசுக்களும் கட்டுப்படும்.இயற்கையான பொருள் என்பதால், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பயோ ஃபைனை சரியான விகிதத்தில் ஆகாயத்தாமரைகளின் மீது தெளிக்க வேண்டும். அளவு குறைந்தால் இந்தக் களைக்கொல்லியே ஆகாயத்தாமரைகளுக்கு உரமாக மாறி விடும்" என்கிற ராஜேந்திரன், கிராம மக்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே தொழில் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களை அளிக்கும் ‘Unit of rural bio-technology’ என்கிற மையத்தை தனது கல்லூரியிலேயே நிறுவியுள்ளார்.
பயோ ஃபைன் தெளிக்கப்பட்ட நீரை இரண்டு நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தத் தொடங்கலாம்.மேலும் பயோ ஃபைனினால் அழிக்கப்பட்ட ஆகாயத் தாமரைகள், துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. தற்போது ஒரு லிட்டர் பயோ ஃபைன் களைக்கொல்லி 350 ரூபாய் வரை ஆகிறது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது இதன் விலை குறையலாம்.
தொடர்புக்கு: 94439 98480
|