|
செய்திகள்
ஏஐசிடிஇ அனுமதி தேவையில்லை!
எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதியை தனியார் கல்லூரிகள் பெற வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் பல்கலைக்கழகங்கள் அனுமதி பெறத் தேவையில்லை என்றாலும்கூட, அவற்றின்கீழ் இயங்குகிற கல்லூரிகள் அனுமதி பெறுவது அவசியம் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக தனியார் கல்லூரி நிர்வாகங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சௌகான், கோபால கௌடா ஆகியோரடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. “தொழில்நுட்பக் கல்வியைப் பொருத்தவரை அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில்ஒரு ஆலோசனை அமைப்பு மட்டுமே. ஏஐசிடிஇ விதிகளின்படியும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படியும் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படுகிற கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇக்கு எந்தவொரு அனுமதியை வழங்கவோ, அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தவோ எந்த அதிகாரமும் கிடையாது. ஏனெனில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் பங்களிப்பு என்பது வழிகாட்டுவதும் பரிந்துரைகள் செய்வதும்தான். எனவே, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அனுமதி தேவையில்லை” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
கல்வி சாரா பயிற்சிக் கட்டணத்தில் அரசு தலையிட முடியாது!
கல்வி சாரா பயிற்சிகளுக்காக தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களை அரசு முறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள கவி பாரதி வித்யாலயா பள்ளி, கல்வி சாரா திறன் பயிற்சிகளுக்கு மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்று பள்ளி நிர்வாகத்துக்கு கல்விக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பானுமதி, ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
“தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு கல்வி சாராத கூடுதல் திறன் பயிற்சிகளை வழங்குகின்றன. கல்வி சாரா கூடுதல் திறன் பயிற்சி வழங்குவதில், மாநில அரசோ அல்லது தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவோ தலையிட முடியாது. மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு, மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் மட்டுமே தலையிடும் அதிகாரம் கொண்டதாகும். பள்ளிக்கு வெளியேயும், பள்ளி நேரம் முடிந்த பின்னரும் கூடுதல் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவை கல்வி சார்ந்த நடவடிக்கையின்கீழ் வருவதில்லை. இதனால் தமிழகப் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளின்கீழ் இந்தக் கட்டணங்கள் வராது” என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கல்வித் திட்டம் சாராத பயிற்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் கருதினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என்று நீதிபதிகள்அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.
|