|
பாத்தி கட்டாமலும் கடலை நடலாம்..!
சா.சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)
இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் நிலக்கடலையின் பங்களிப்பு 40 சதவிகிதம். தமிழகத்தில் சுமார் 9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இறைவைப் பயிராகவும், மானாவாரிப் பயிராகவும் கடலை பயிரிடப்படுகிறது. பொதுவாக, கடலை பாத்தி அமைத்து சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.இந்த முறையில் பயிரிடும்போது, வரப்பு மற்றும் பாத்திகள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால், பயிர்ப்பரப்பு குறைகிறது. மேலும், அறுவடைக் காலமும் தள்ளிப்போவதுடன், செலவும் பிடிக்கிறது. ஆனால், பாத்தி கட்டாமல் சமநிலத்தில் கடலை நடவு செய்யும்போது, நிலம் வீணாவது தவிர்க்கப்படுவதுடன் சீக்கிரமே அறுவடைக்குத் தயாராகி விடுகிறது. மேலும் மானாவாரியாகப் பயிரிடப்படுவதால், நீரின் தேவையும் ஓரளவு குறைகிறது. இந்த முறையில் பாத்தியில்லாமல் சமநிலத்தில் கடலை பயிரிட்டுள்ளனர், நெல்லை மாவட்டம் பண்பொழி கிராம விவசாயிகள். அவர்களிடம் பேசினோம்...
கடலை உற்பத்தியில் ஹெக்டேருக்கு ஒரு டன் என்ற அளவை எட்டியிருந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு மகசூல் ஏற்ற இறக்கமாகத்தான் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாகவே நாங்கள் கடலையை பாத்தி கட்டாமல், சமநிலத்தில் பயிரிட்டு வருகிறோம். பாத்தி மற்றும் வரப்பு அமைக்கும் பணி இல்லாததால், அதனால் ஏற்படும் செலவு தவிர்க்கப்படுகிறது. மேலும், அதிகப் பயிர்ப்பரப்பு, நீர்த்தேவை குறைவு மற்றும் முன்கூட்டியே அறுவடை போன்ற நன்மைகளும் கிடைக்கின்றன" என்கின்றனர், விவசாயிகள் பீர் முகம்மது மற்றும் காளி. தொடர்ந்து பாத்தியில்லா கடலை சாகுபடி முறை குறித்து அவர்கள் விளக்கினார்கள்...
மணற்பாங்கான செம்மண், வண்டல் மண் நிலங்கள் நிலக்கடலைப் பயிருக்கு ஏற்றவை. மண்ணின் தன்மைக்கேற்ப 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக்கலப்பை கொண்டு கட்டிகள் நன்கு உடையும்வரை உழவு செய்ய வேண்டும். இறுதி உழவுக்குமுன் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது 4 டன் மக்கிய தென்னை நார்க்கழிவை இட வேண்டும். ஏக்கருக்கு, சிறிய பருப்பு என்றால் 55 கிலோ, பெரிய பருப்பு என்றால் 60 கிலோ தேவைப்படும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் அவசியம் இருக்க வேண்டும். டி.எம்.வி. 2, டி.எம்.வி. 7, ஜே.எல். 24 ஆகிய ரகங்களைச் சேர்ந்த நிலக்கடலை விதைகளை சாகுபடி செய்யலாம். விதைக்கும்போது, ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் இரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரு பாக்கெட் உரங்களை அரிசிக் கஞ்சியில் கலந்து, டிராக்டர் கொண்டு விதைக்க வேண்டும்.
இளம் பயிர்களில் பயிர் வீரியம் அதிகரிக்க, கால்சியம் குளோரைடு கரைசலையும் பயன்படுத்தலாம். நிலக்கடலை விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதனை செய்ய, அருகிலுள்ள விதைப் பரிசோதனை அலுவலகத்தை நாடலாம். விதைக்கப்படும் விதை 4 செ.மீ. ஆழத்திற்குக் கீழே சென்றுவிடக் கூடாது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கிடைக்க, 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும். இதன் மூலம் ஈரத்தன்மை, வேர் வளர்ச்சி பாதுகாக்கப்படுகின்றன. பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு பயன்படுத்தலாம். நிலக்கடலை சாகுபடி செய்யும் வயலைச் சுற்றி ஆமணக்கு பயிரிட்டால், பூச்சி முட்டைகளையும் இளம் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
கடலையில் ஜிப்சம் இடுவது மிக அவசியம். விதைத்த 40,45-ஆவது நாள், ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் நிலக்கடலைக் காய்கள் திரட்சியாக உருவாகவும், எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. நிலக்கடலைக்குத் தேவையான உயிர் உரங்கள், ஜிப்சம் ஆகியவை மானிய விலையில் வேளாண் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏக்கருக்கு, புளுகுளோரலின் களைக்கொல்லியை 800 மி.லி. என்கிற அளவில், விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து, களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைக்கும் சமயம், விதைத்த 20,22-ஆம் நாள், விழுது இறங்கும் சமயம், காய்ப்பிடிப்பு மற்றும் முதிர்ச்சித் தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.
கடலைச் செடியின் நுனி இலைகள் மஞ்சளாக மாறி, அடி இலைகள் காய்ந்து உதிர்ந்த நிலையில் இருக்கும். இதுதான் அறுவடைக்கான அறிகுறி. அறுவடைக்கு முன்பு நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால், நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளை குவியலாக வைக்காமல், உடனே செடியிலிருந்து பிரித்தெடுத்துவிட வேண்டும். காய்களை 4 அல்லது 5 நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும்.
9 சதவிகிதம் ஈரப்பதம் வரும்வரை காயவைக்க வேண்டும். வெப்பநிலை அதிகளவு இருக்கும்போது, நேரடியாக உலர்த்தக் கூடாது. காய்களைக் கோணிப் பைகளில் கட்டி, மணற்பரப்பின் மீது சேகரித்து வைக்கலாம். பாத்தியில்லா வயலில் ஏக்கருக்கு 20 மூட்டை கடலை பெறலாம்" என்கின்றனர்.
(பசுமை படரும்)
|