|
ஏன் இந்தக் கொலை வெறி?
இன்று நேற்றல்ல, 22 வருடங்களாகச் சிறையில் இருக்கிறார் அவர். இங்கல்ல, பாகிஸ்தானில். 1990-இல் லாகூரிலும், மூல்தானிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர் என்பது அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு. அதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, அவரது கருணை மனு நிராகரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், 22 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார் சரபஜித் சிங். இவர் ஓர் இந்தியர்.
சிறையில் இருக்கும் இவர் மீது ஏப்ரல் 27-ஆம் தேதி கடுமையாகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.செங்கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் தலை, வயிறு, தாடை எனப் பல இடங்களில் தாக்கப்பட்ட அவர் படுகாயமுற்று, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால், உயிர் பிழைப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.
மதிய உணவிற்குப்பின் தனது அறைக்கு வெளியே உலவிக் கொண்டிருந்த சரபஜித்தை, பேசிக் கொண்டிருக்கும்போது வார்த்தை தடித்ததால், மற்ற கைதிகள் தாக்கினார்கள் எனச் சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இது இந்திய பாராளுமன்றத்தைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய அப்சல் குரு, கடந்த பிப்ரவரியில் தூக்கிலிடப்பட்டதிலிருந்தே சரபஜித்திற்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் இந்தத் தாக்குதல் அதற்கான பழி வாங்கல் என சரபஜித்தின் வழக்கறிஞர் சொல்கிறார்.
சிறை அதிகாரிகள் சொல்லும் காரணங்கள் நம்பத்தக்கவையாக இல்லை. ஏனெனில், சரபஜித்தைப் போன்ற தூக்குதண்டனைக் கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதிலும் சரபஜித் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள், உளவு பார்த்தார், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள். அதுவும் தவிர, அவர் அயல்நாட்டவர். இப்படிப்பட்டவருடன் மற்ற கைதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள், பேச்சு தடித்து வன்முறைத் தாக்குதல் நடந்தது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.
நடந்தது வெறும் வன்முறைத் தாக்குதல் மட்டுமல்ல, அப்பட்டமான கொலை முயற்சி. அது சிறை அதிகாரிகளின் உதவியோ, ஒத்துழைப்போ இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பது வெளிப்படை.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நிலவக் கூடாது என விரும்புகிற சக்திகள், பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அந்த நிலைப்பாடு அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆதாயம் தரக் கூடியது என்பதால், அவை அந்த நிலையை எடுத்துள்ளன. பாகிஸ்தான் இப்போது தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் சிறை வைக்கப்படும் இந்தியர்கள், மிக மோசமாக நடத்தப்பட்டு வந்திருப்பதாகவும் சிலர் சிறையிலேயே மடிந்திருப்பதாகவும் பாகிஸ்தான் நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் சமூகத்தின் கீழ்நிலையில் அதிகாரம் அற்ற மீனவர்கள் என்பதால், அதைப் பற்றி இந்தியாவில் கூச்சல் எழவில்லை எனவும் அவை சொல்கின்றன.
இது உண்மையாக இருக்கலாம். ஆனால், அங்கு சிறையில் உள்ள இந்தியர்களைப் பற்றி இங்குள்ளவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்பதால், அந்த இந்தியர்களைத் தாக்க பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் கிடையாது.
இது ஒரு துயரச் சம்பவம் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இப்போது தேவைப்படுவது மென்மையான வார்த்தைகள் அல்ல, கடுமையான கண்டனம். அது மட்டுமே அங்கு சிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
|