'18 ப்ளஸ் காட்சிதான் பிரச்னையா?'- தேசிய விருது வென்ற படத்துக்கு திரையில் முட்டுக்கட்டைகள்

'18 ப்ளஸ் காட்சிதான் பிரச்னையா?'- தேசிய விருது வென்ற படத்துக்கு திரையில் முட்டுக்கட்டைகள்
'18 ப்ளஸ் காட்சிதான் பிரச்னையா?'- தேசிய விருது வென்ற படத்துக்கு திரையில் முட்டுக்கட்டைகள்

தேசிய விருது பெற்ற திரைப்படத்துக்கு கேரளாவில் தியேட்டர் அதிபர்களால் ஏற்பட்டுள்ள நிலைமை தற்போது சர்ச்சையாகி வருகிறது.

சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழைப் போன்றே மலையாள திரையுலகை சேர்ந்த பல படங்கள் விருதுகளை அள்ளின. இதில் குறிப்பிடத்தக்க படம் 'பிரியாணி'. சஜின் பாபு என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். சஜின் இதற்கு முன்னர் இரண்டு குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியுள்ளார் - 'அன்டோ தி டஸ்க்' மற்றும் 'அயல் சாஸி'. இவை இரண்டும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள். இவர் தற்போது இயக்கியுள்ள 'பிரியாணி' படம் ரோம் நகரில் நடந்த ஆசியடிகா திரைப்பட விழாவில் நெட்பாக் சிறந்த திரைப்பட விருது, பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருது மற்றும் பல விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது.

இந்தப் படம், சமீபத்தில் முடிவடைந்த கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவிலும் (IFFK) திரையிடப்பட்டது. கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண்ணின் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது 'பிரியாணி படம்'. நடிப்பிற்காக சிறந்த பெண் நடிகருக்கான மாநில விருதை வென்ற கனி குஸ்ருதியால் மைய கதாபாத்திரமான கதீஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் சிறப்பாக நடித்ததற்காக மாஸ்கோ திரைப்பட விழாவின் பிரிக்ஸ் போட்டி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதையும் கனி வென்றுள்ளார்.

இந்த நிலையில், 'பிரியாணி' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளா முழுவதும் சுமார் 30 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும், பல திரையரங்கு உரிமையாளர்களும் மேலாளர்களும் படத்தைத் திரையிட மறுத்து வருகின்றனர். படத்தில் இருக்கும் சில காட்சிகள் காரணமாக திரையிட மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் இயக்குநர் சஜின் பாபு கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ``படத்தைப் பார்க்க போதுமான பார்வையாளர்கள் இல்லாததால்தான் திரையிடவில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும் இது உண்மை இல்லை. சுமார் 30 முதல் 40 பேர் இந்த சிறிய திரையரங்குகளுக்கு வருகிறார்கள். குறிப்பாக இப்போது கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50% மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த எண்ணிக்கை ஒன்றும் மோசமான எண்ணிக்கை அல்ல.

அரசாங்கத்தால் நடத்தப்படும் தியேட்டர்கள் திரையிடலை மறுக்கவில்லை, இது பெரும்பாலும் மலபார் பகுதியில் உள்ள ஒரு சில தனியார் திரையரங்குகள்தான் அனுமதி மறுத்துள்ளன. படத்துக்கு வரும் நபர்களிடம் தியேட்டர் மேலாளர் அல்லது உரிமையாளர்கள் படத்தில் இருக்கும் 18 ப்ளஸ் காட்சிகளை சொல்லி படம் பார்க்க வேண்டாம் என்று கூறி வருவதாக எனது நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு படத்தை தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத உள்ளடக்கத்தில் பிரச்னைகள் இல்லை. அவர்கள் படத்தை புரிந்து கொள்ளவில்லை அல்லது அவ்வாறு செய்ய முயற்சி எடுக்கவில்லை.

திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அசோசியேஷனின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நான் சங்கத்தை தொடர்பு கொண்டபோது, அத்தகைய நடவடிக்கை எதுவும் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒரு நெருங்கிய வட்டத்தினருடனான எங்கள் தொடர்புகளிலிருந்து, கேரளாவில் திரைப்படம் ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் முற்போக்கான கருத்துகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் இன்னும் பின் தங்கியுள்ளோம் என்பதை இது காட்டுகிறது.

இதேபோன்று காட்சிகள் கொண்ட ஒரு வெளிநாட்டு படமோ அல்லது வெளிமாநில படமாக இருந்தால், அதே திரையரங்குகளில் சிக்கல் இல்லாமல் வெளியிடுகின்றனர். இருப்பினும் இதை ஒரு மலையாள படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com