கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சரத்குமார்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சரத்குமார்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சரத்குமார்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்குமார் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

மூத்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்திருந்தனர். 

இதையடுத்து ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது மகள் வரலட்சுமியும் அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளார். 

இதுதொடர்பாக சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டிசம்பர் 8 அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.

உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயக்குமார், ரவிக்கிரண், சந்திரகாந்த், செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மை பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.
மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள், சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்.
இருப்பினும், கொரோனா தொற்று உலகில் பல மக்களை தற்போதும் பாதித்து வருகிறது. கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்'' என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com