ஆரம்பமாகிறது வெயிலின் ஆட்டம் - செய்ய வேண்டியவை என்னென்ன..?

ஆரம்பமாகிறது வெயிலின் ஆட்டம் - செய்ய வேண்டியவை என்னென்ன..?
ஆரம்பமாகிறது வெயிலின் ஆட்டம் - செய்ய வேண்டியவை என்னென்ன..?

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிக்க கோடை காலத்தில் வரும் நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சருமப் பிரச்னைகள், உடல் சூட்டால் வரும் உபாதைகள் என அனைவரும் கோடை வெயிலால் வாடி வதங்கி விடுங்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் மட்டுமின்றி மஞ்சள் காமாலை போன்ற உயிரைக்குடிக்கும் நோய்களும் வெயில் காலத்தில்தான் அதிகம் வருவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். கடந்த ஆண்டு தமிழகத்தில் பரவலான மழை பெய்திருந்தாலும், சென்னையில் போதிய மழை பொழிவு இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

நகர்ப்புற பகுதிகளில் தான் வெயில் மண்டைய பிளக்கிறதே என நினைத்தால், கிராமப்புறங்களில் அதைவிட மோசம். சக்கபோடு போடுது. பெரும்பாலானோர் கோடை வெயிலுக்கு பயந்து கொண்டு உச்சி வெயில் நேரங்களில் வெளியில் வருவதே இல்லை. பலர் வேறு வழியின்றி வேலை காரணமாக வெளியே வந்துதான் ஆக வேண்டும். இதிலும் கொரியர், டெலிவரி, மார்க்கெட்டிங், மெடிக்கல் ரெப் போன்று வெளியே சுற்றும் பணியாளர்கள்தான் இந்த கோடையில் ரொம்பப் பாவம் ஆகிவிடுகிறார்கள். கோடைக்காலத்தில் அடியெடுத்து வைக்கும் போதே, இந்த வெயிலை எதிர்கொள்ள என்ன வழி என பலரும் தீவிர சிந்தனையில் இறங்கியுள்ளனர். சிலர் இப்போதே குளிர்சாதன பெட்டிக்குள் குடியேறத் துவங்கிவிட்டனர். ஆனால், இந்த வெயிலில் இருந்து எளிதில் தப்பிக்க பல வழிகள் உண்டு.

கோடை காலத்தில் வெயிலின் வெப்பத்தால் உடலில் தண்ணீரின் அளவு கணிசமாக குறைகிறது. எனவே அதிகளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம். வழக்கமாக குடிக்கும் அளவை விட சில லிட்டர் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல். எனவே ஆடைகளையும் இந்தக் காலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம். அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான். பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்தி ஆடைகளை உடுத்துங்கள்.

பணி நேரமோ அல்லது ஷாப்பிங்கோ எங்கு சென்றாலும் பையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் எலுமிச்சை அல்லது சீரகம் கலந்த தண்ணீர் என்றால் இன்னும் மேல். பலவிதமான சன் க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால், அது அனைவரது சருமத்திற்கு பொருந்துவதல்ல. எனவே இயற்கையான சன் க்ரீம்கள் அல்லது ஆயுர்வேத க்ரீம்களை பயன்படுத்தலாம் (தேவை இருந்தால் மட்டும்)

உணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதேபோன்று பானங்களிலும் இயற்கையானவற்றை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம் பருகலாம். வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். கூலிங்கில் வைத்த குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. ஐஸ் போட்ட ஜூஸ்களையும் தவிர்க்கலாம்.

வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும். குறைந்த பட்சம் நாள் ஒன்று 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சிலர் கோடை வெயிலில் சிக்கிக்கொண்டால், ‘அய்யோ அம்மா’ என கதறும் அளவிற்கு அவர்களுக்கு வயிற்று வலி வந்துவிடும். இதற்குக் காரணம் உடற்சூடு. இதனை தவிர்க்க உறங்கும் முன் வெந்தயத்தை தலைக்கு தேய்த்துக்கொள்ளலாம்.

பின்னர் காலை எழுந்தவுடன் குளித்தால் உடற்சூடு நீங்கும். படுக்கைகளை தூய்மை செய்துவிட்டு தூங்க வேண்டும். கோடைகாலத்தில் ஏசி-யை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் நீண்ட மாதங்களாக பயன்படுத்தமால் இருந்த ஏசி-யை பயன்படுத்துவதால் அதனை தூய்மை செய்து உபயோகிப்பதன் மூலம், சுவாசக்கோளாறுகளை தவிர்க்கலாம்.

கோடைக்காலத்தில் தான் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் விடுமுறை. அதனால் அவர்கள் அதிகம் விளையாடச் செல்வது இந்தக் கோடையில்தான். அவ்வாறு வெயிலில் விளையாடச் செல்லும் அவர்களுக்கு வியர்வை முடியில் படிந்து பொடுகு, தலை அரிப்பு, அழற்சி போன்றவை ஏற்படும். இவற்றை தவிர்க்க அவர்களுக்கு தலை முடி வெட்டிக் குறைக்கலாம். வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்து கொள்ளலாம். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com