‘பிரியாணியில் கருத்தடை மாத்திரையா?’ - வகைவகையான வாட்ஸ் அப் வதந்திகள்.. உஷார்..!

‘பிரியாணியில் கருத்தடை மாத்திரையா?’ - வகைவகையான வாட்ஸ் அப் வதந்திகள்.. உஷார்..!
‘பிரியாணியில் கருத்தடை மாத்திரையா?’ - வகைவகையான வாட்ஸ் அப் வதந்திகள்.. உஷார்..!

படித்தவர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கல்வி அறிவு கூடியிருக்கிறது. முன்பைவிட மக்கள் அதிகம் நாகரிகம் அடைந்துள்ளனர். ஆனால் என்ன பயன்? பவானி ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்யைக் கூட கூச்சமே இல்லாமல் உண்மை என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள். தனக்கு வரும் செய்தியை உண்மையா என படித்து புரிந்து கொள்வதற்கு முன்பே அதை ஃபார்வேர்ட் செய்து விடுகிறார்கள். இதை தினமும் ஒரு பணியாக பலர் செய்கிறார்கள் என்பதே வேதனை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதுக்கோட்டையருகே பொன்னமராவதியிலுள்ள இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்ட உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகி, அது பல பேருக்குப் பரவியது. காது கொடுத்து கேட்கவே முடியாத வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் படித்து நாகரிகம் அடைந்த சமூகத்தில்தான் உள்ளோமா? என சந்தேகிக்கும்படி இருந்தது. வார்த்தைகளில் இருந்த வன்மத்தால் ஊரே கலவரமாகிவிட்டது. அந்த இரண்டு மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதற்குள் காவல்துறைக்கு போதும்போதும் என்றாகிவிட்டது. இப்படி யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கலவரச் சூழலை ஏற்படுத்தும் அளவுக்கு வதந்திகள் வளர்ந்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரவ, சென்னையைத் தாண்டி பல ஊர்களில் போராட்டம் வெடித்தது. அதனையடுத்து, தருமபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் இந்தப் போராட்டம் தொடர்பாக ஒரு செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே அதனை வெளியிட்டது கொடுமையிலும் கொடுமை. இறுதியில் அதற்காக அவர் மன்னிப்பும் கோரி இருந்தார். கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்களையே செயலிழக்கச் செய்துள்ளது இந்த வாட்ஸ் அப் செயலி. வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு இணையாக வளர்ந்து வரும் வதந்திகளைத் தடுப்பது காவல்துறையின் கடைமை என்பதைத் தாண்டி பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பு இருக்கிறது. அதைப் பொதுமக்கள் புரிந்து கொள்வது முக்கியம்.

இந்த வதந்தி செய்தி பரவல் குறித்து நம்மிடம் பத்திரிகையாளர் ஷியாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “முதல்ல அது Personal messenger ஆக இருந்தது. இந்த பர்சனல் மேட்டரை மட்டும் பகிரிந்த போது பிரச்னையே இல்லை. அதை Public messenger ஆக மாற்றியதால்தான் பிர்சனையே முளைத்தது. இப்போது அது Political messenger ஆக மாறி நிற்கிறது. ஆக மூன்றுமே ‘P’தான். ஆகவே பொலிட்டிகல் மேசஜை நீங்க படித்துவிட்டு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். சமூக ஊடகங்களில் புதிய கணக்கை ஆரம்பித்த உடனேயே 5 ஆயிரம் பேர் சேர்ந்துவிடுகிறார்கள். அதில் முக்கால்வாசி போலியானவைதான். இப்போது திமுக, தேர்தல் பணிக்காக பிரசாந்த் கிஷோரை அமர்த்திருக்கிறார்கள். ஆகவே இப்போது அதிமுக சுனிலை அமர்த்த இருப்பதாக ஒரு வாட்ஸ் அப் செய்தி இன்று எனக்கே வந்தது. இப்படி ஒரு செய்தியை வேண்டும் என்றே கிளப்பிவிட்டு இருக்கிறார்கள். அதிமுக இந்த மாதிரி செய்யாது. இது ஒரு உதாரணம்” என்கிறார்.

“இதுவரை வந்த வதந்தியிலேயே மாபெரும் வதந்தி என்றால் ஜெயலலிதாதான் சசிகலாவைக் கொன்றார் என்பதுதான். அதனால் அவரது அரசியல் வாழ்கையே முடங்கிப் போய்விட்டது. இன்று அந்த உண்மையற்ற செய்திக்கு யார் பொறுப்பு ஏற்பது? அரசாங்க முயற்சியால் இந்த வாட்ஸ் அப் செய்தியை 5 பேருக்கு மேல் பகிரமுடியாது எனக் கொண்டுவரப்பட்டது. அது நல்ல விஷயம்” என்கிறார்

இது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “காவல்துறை எவ்வளவோ முயற்சி செய்து இதைத் தடுக்க முயற்சிக்கிறது. ஆனால் அதை மீறும் அளவுக்குத்தான் செயல்கள் நடக்கின்றன. மற்ற வழக்குகளை ஒப்பீட்டு அளவில் இவை அதிகம். ஆனால் இவை nuisance case வழக்குகள்தான். குற்றச்சம்பவங்களுக்கு அதைவிட முக்கியத்துவம் கொடுக்க வேண்டி உள்ளது. இந்த வதந்திகளால் அதிகம் பாதிக்கப்படுவது முதலில் காவல்துறைதான். ஆனால் சிஏஏ பற்றி தவறாக வதந்தி பரப்பி கலவரத்தையே உருவாகிவிட்டார்களே” என்கிறார்.

இந்த வதந்திகளைத் தடுப்பது எப்படி? இது குறித்து ஃபேக்ட் செக்கர் துறையில் இயங்கி வரும் ஐயன் கார்த்திகேயனிடம் பேசினோம். “இன்றைக்கு நமக்கு வரும் தகவல்கள் அனைத்தும் புதிய தளத்திலிருந்து வருகிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்? வாட்ஸ் அப் பொய் சொல்லாது, யூடியூப் பொய் சொல்லாது என நம்புகிறார்கள். அப்புறம் அதிக லைக் மோகத்தால் இதைச் செய்கிறார்கள். இது எல்லாம் ஒரு சின்ன அளவுக்கானது. ஆனால் வியாபார வளர்ச்சிக்காகச் சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஒரு தொழிலை முடக்குவதற்காகத் திட்டமிட்டு இதை வேலையாகக் கூடச் செய்கிறார்கள். இந்த வதந்திக்குள் ஒரு வியாபார நோக்கமும் இருக்கிறது.

ஆகவேதான் கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் எங்களைப் போன்ற உலகம் முழுவதும் உள்ள ஃபேக்ட் செக்கர்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இப்ப லேட்டஸ்ட் வதந்தி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் கடையில் பிரியாணி சாப்பிடாதீர்கள் எனச் செய்தி பரப்புகிறார்கள். அதில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்துவிடுவதாகக் கருத்தைப் பரப்புகிறார்கள். அதனால் ஒருவருக்குக் குழந்தை பிறக்காமல் போய்விடும் என நம்பச் செய்யும்படி இதைப் பரப்புகிறார்கள்.

இது குறித்து மருத்துவர்களிடம் பேசினோம். அவர்கள் 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஒருவர் மாத்திரை சாப்பிட்டால்தான் கருத்தடை சாத்தியம் என்கிறார்கள். ஆகவே 21 நாட்கள் வரை ஒரே கடையில் பிரியாணி சாப்பிட வாய்ப்பே இல்லை. அதுவும் இந்தியா போன்ற நாட்டில் பெண்களை மையமாக வைத்துத்தான் கருத்தடையை அதிகம் செய்து வருகிறோம். அப்படி இருக்கும் போது இந்த வதந்தியை மத ரீதியாக மக்களைப் பிரிக்க வேண்டும் என்றே பரப்பி வருகிறார்கள். அதை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com