தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்!

தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்!
தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில், ஜூன் மாதத்திற்கு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளது.

இதை தவிர்த்து உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், மேகதாதுவில் புதிய அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பையும் தமிழக அரசு அதிகாரிகள் பதிவு செய்ய உள்ளனர். 

கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கு கர்நாடக அரசு தமிழகத்திற்கு மொத்தம் 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

 ஆனால் இதுவரை 1.72 டி.எம்.சி. நீரை மட்டும்தான் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. மீதமுள்ள நீரையும் உடனடியாக திறந்துவிடுவது சம்பந்தமாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

கர்நாடக அரசு சார்பில் தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்பது கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

 இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூர் உசேன் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சம்பந்தமாக முக்கிய உத்தரவை பிறப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com