குப்பை மேடு சரிந்து 10 பேர் பலி: கொழும்புவில் சோகம்
இலங்கையில் குப்பை மேடு சரிந்து தீப்பிடித்ததில் பத்து பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மீதொட்டு முல்லையில் குப்பை மேடு ஒன்று உள்ளது. 91 மீட்டர் உயரமுள்ள பெரிய குப்பை மேடு இது. இதன் கீழே பலர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். நேற்று இந்தக் குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்து. இதில் 40-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இதில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் குப்பை மேட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டதால் 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மீட்பு பணி நடந்துவருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘எத்தனை வீடுகள் குப்பைக்குள் புதைந்தன என்பது பற்றியும் பலியானோர் எண்ணிக்கை பற்றியும் இப்போது உறுதியாகக் கூற முடியாது’ என தெரிவித்தனர்.