குட்கா ஊழலில் பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பா..? இதுவரை நடந்தது என்ன..?

குட்கா ஊழலில் பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பா..? இதுவரை நடந்தது என்ன..?
குட்கா ஊழலில் பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பா..? இதுவரை நடந்தது என்ன..?

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா ஊழல் விவகாரம் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.

2013-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் தடையை மீறி தமிழகத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்வதாக புகார்கள் எழுந்தன. 2016-ஆம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில், சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில், வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சென்னை மட்டுமல்லாமல் எம்.டி.எம். குட்கா நிறுவன உரிமையாளர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எம்.டி.எம். நிறுவனம் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது சோதனையின் போது தெரியவந்தது. விவகாரம் அதோடு முடிந்திருந்தால் வருமானவரித்துறை நடத்திய பல்வேறு சோதனைகளில் இதுவும் ஒன்றாக போயிருக்கும். வரிஏய்ப்பு ஆவணங்களுடன் வருமானவரித்துறை கைப்பற்றிய சில முக்கிய ஆதாரங்கள்தான், இந்த பிரச்னை பூதாகரமாக காரணமானது.

குறிப்பாக எம்.டி.எம். குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வீட்டில் கைப்பற்ற டைரியில், குட்கா விற்பனைக்காக யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது, என்ற விவரம் இருந்தது. அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி, குட்கா ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி, வருமானவரி புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, தலைமைச் செயலர் அலுவலகம் மற்றும் அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகனராவ் வீட்டில், வருமானவரித்துறை சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும், அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, அந்த தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, குட்கா ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியது. அதிரடிகள் அதோடு அடங்கவில்லை, 2017ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. ‌ இந்த நிலையில் குட்கா வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றக்கோரி, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com