நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... 'தேர்தல் ஆதாய' சந்தேகம் எழுவது ஏன்?

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... 'தேர்தல் ஆதாய' சந்தேகம் எழுவது ஏன்?
நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... 'தேர்தல் ஆதாய' சந்தேகம் எழுவது ஏன்?

நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்திய சினிமாவுக்கு ரஜினி அளித்த பங்களிப்பு மிக முக்கியமானதுதான் என்றாலும், இந்த விருது அறிவிக்கப்பட்ட காலமும் சூழலும்தான் அரசியல் சார்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே தாதா சாகேப் பால்கே விருது என வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகள் பெற வேண்டும் எனவும் வாழ்த்து கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது, அவர் ரசிகர்களின் வாக்குகளை கவர பாஜக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழக தேர்தலையொட்டி ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய திரைப்பட பத்திரிகையாளர் பிஸ்மி “ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை பெற்ற ஒரு நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு அது தகுதியான விருதுதான். அதில் மாற்றமே இல்லை. அவருக்கு இந்த விருது காலம் கடந்து வழங்கப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம். அதனால் ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினிகாந்துக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

ஆனால் இந்த விருது எந்தச் சூழலில் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் பாஜக அரசு ரஜினிகாந்தை தமது பக்கம் எப்படியாவது இழுத்து விட வேண்டும் என நினைத்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கு பல அழுத்தங்களை பாஜக கொடுத்தது. அவரும் கட்சி ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்தில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கிவிட்டார். ரஜினி ஆதரவாளர்களின் வாக்கு இந்தத் தேர்தலில் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நேரத்தில்தான் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு இந்த விருதை அறிவித்துள்ளது. ரஜினி ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற பாஜக செய்த குறுக்குவழி; சதி வேலை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் நியாயமாக கொடுக்க வேண்டிய மகிழ்ச்சி இது கொடுக்கவில்லை என்றுதான் பார்க்கிறேன்.

தேர்தலுக்கு ரஜினி விருது அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் ஜவடேகர் சொல்வதால் பாஜக சொல்வதாக அர்த்தமில்லை. ஒரு சாமானிய மனிதராக இதை சிந்தித்தாலே தெரிந்துவிடும். தேர்தல் நடக்க இருக்கும் சில நாட்களில் இவ்வாறு விருது அறிவிப்பது அதன் உள்நோக்கம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதேபோல் ரஜினிக்கு விருது கொடுத்ததால் தமிழக மக்கள் எல்லோரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என நினைத்தால் அதைவிட அறிவின்மை ஏதும் கிடையாது. தமிழகத்தில் பாஜக மலராது. அவர்கள் எண்ணம் பலிக்காது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com