பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு எதிர்கட்சியினர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு மாநிலங்களவையில் இன்று தொடங்கியது. முதற்கட்டமாக மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இன்று மகளிர் தினம் என்பதால் மாநிலங்களவை பெண் உறுப்பினர்கள் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினர். அதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கிய நிலையில் எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிக அளவு வரி காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அது குறித்து விவாதிக்க பின்னர் நேரம் ஒதுக்கப்படும் என்றார். அதனைத்தொடர்ந்து எதிர்கட்சியினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரை வெங்கையா நாயுடு பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.