குற்றம்

சென்னை காப்பகத்தில் பெங்களூர் சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாட்ச்மேனால் நேர்ந்த கொடூரம்

kaleelrahman

தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாட்ச்மேன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு, பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் காப்பகத்தில் வாட்ச்மேனாக பணிபுரியும் திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (40) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு சிறுமியை, அவரது தாயார் அழைத்துக்கொண்டு பெங்களூர் சென்று உள்ளார். அப்போது தான் மகளுக்கு, வாட்ச்மேன் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து, கமிட்டி தலைவர் வனஜா முரளிதரன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், வாட்ச்மேன் தேவேந்திரன் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் தேவேந்திரனை போக்சோவில் கைது செய்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.