தமிழ்நாடு

அரியர் தேர்வு வழக்கு விசாரணை யூடியூப்பில் ஒளிபரப்பு - நீதிமன்றம் அதிர்ச்சி!

webteam

அரியர் தேர்வு ரத்து தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை யூடியூப்பில் வெளியானதால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையை காணொலி முறையில் 200-க்கும் அதிகமான மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அறிவுறுத்திய பின்னரும் மாணவர்களிடையே அமைதியின்மை காணப்பட்டதால் விசாரணையை நீதிபதிகள் நிறுத்தினர்.

இந்த நிலையில் அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்றைய விசாரணையானது யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இந்த தகவலை நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.