விளையாட்டு

"இது என்ன மாதிரியான கேப்டன்சி!" - கோலியை வெளுத்த கவுதம் காம்பீர்

jagadeesh

இது என்ன மாதிரியான கேப்டன்சி என எனக்கு புரியவில்லை என்று விராட் கோலியை சரமாரியாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இன்னும் ஓர் போட்டி மட்டுமே மீதமிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அதுவும் இந்திய அணியின் வியூகங்களும் பவுலிங்கும் மிக மோசமாக அமைந்ததே இதற்கு காரணம். இது குறித்து முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

"ஈஎஸ்பின் கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேசியுள்ள கவுதம் காம்பீர் "எனக்கு நிஜமாகவே இது என்ன மாதிரியான கேப்டன்சி என புரியவில்லை. விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவது குறித்த முக்கியத்துவத்தை தொடர்ந்து பேசி வருகிறோம். உங்களின் பிரதான பவுலர்களுக்கு முதல் தலா 4 ஓவர்களை வீச செய்ய வேண்டும். பின்பு ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் முக்கிய பவுலர்களுக்கு வெறும் 2 ஓவர்களை வழங்கிவிட்டு, வேறு பவுலர்களை அழைப்பது சரியான அனுகுமுறையல்ல" என்றார்.

மேலும் பேசிய அவர் "அதனால்தான் இது என்ன மாதிரியான கேப்டன்சி என்ற கேள்வி எழுகிறது. இது டி20 கிரிக்கெட் அல்ல என்பதையும் புரிந்துக்கொள்ளவேண்டும். இது ஒரு மோசமான கேப்டன்சி. இதுபோன்ற செயலுக்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அடுத்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்கள் ஒருநாள் போட்டியில் எப்படி விளையாடுகிறார்கள் என்றும் நாம் பார்க்க வேண்டும்" என்றார் காம்பீர்.

தொடர்ந்து பேசிய காம்பீர் "தொடரில் பங்கேற்க சென்றிருக்கும் வீரர்களை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரிய வரும். அடுத்தடுத்தப் போட்டிகளில் வாயப்புகளை வழங்கி சோதிக்கவில்லை என்றால் இம்முறை கடுமையான தோல்விகளை கண்டு நாடு திரும்பும் இந்திய அணி" என தெரிவித்துள்ளார்.